நன்றி மறவாத எறும்பு :
ஒரு கட்டெறும்பு ஆற்றுத்தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மரத்திலிருந்து இதைப்பார்த்துக் கொண்டிருந்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசிய அவ்வேளை எறும்பு தத்தித்தத்தி வந்து இலையின் மேல் ஏறிக்கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரையை அடைந்தவுடன் உயிர் பிழைத்துக் கொண்ட எறும்பு புறாவிற்கு நன்றி கூறியது. மற்றொரு நாள் ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதை எறும்பு பார்த்தது. ஆனால் புறாவோ வேறெங்கோ கவனமாய் இருந்தது. அன்று தன் உயிரைக் காப்பாற்றிய புறாவைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணிய எறும்பு விரைந்து சென்று வேடனின் காலில் கடித்தது. கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அவ்விடத்தை விட்டுச் செல்லும் முன் எறும்பிற்கு நன்றி சொன்னது. அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிராமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறவாமல் செயற்பட்டது.
எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.